

சாலையோரத் தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் கல்லூரி மாணவர் ஆகியோர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குளத்தூர் போடிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (36). தனியார் தொலைக்காட்சியின் பொள்ளாச்சி செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவர்தனது நண்பர்களான செந்தில்குமார், கல்லூரி மாணவர் கிஷோர்(19) ஆகியோருடன் கோவை சென்றுவிட்டு, பொள்ளாச்சிக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கல்லாங்காட்டுப்புதூர் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்புத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே கிஷோர் உயிரிழந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சந்திரசேகர் இறந்தார். செந்தில்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.