Published : 12 Aug 2015 09:03 AM
Last Updated : 12 Aug 2015 09:03 AM

கூட்டணிக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை கூட்டணிக்காக சந்திக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

காந்தியவாதி சசிபெருமாள் மறைவு குறித்து அறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அவரது மகனுக்கு இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். சசிபெருமாள் குடும்பத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். சசிபெருமாளின் மரணத்தை தமிழக அரசு கொச்சைப் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை அரசால் கைது செய் யப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர் கள் 40 பேர் விடுவிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் விசைப் படகுகளும் விடுவிக்கப்பட வேண் டும். மாநில தகவல் ஆணையத் தின் முதன்மை ஆணையராக கே.ராமானுஜமும் ஆணையர் களாக முன்னாள் நீதிபதி தட்சிணாமூர்த்தி மற்றும் அதிமுக சார்பில் 2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

பூரண மதுவிலக்கை வலி யுறுத்தி காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் 13, 14 தேதிகளில் உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தால், தடையை மீறி உண்ணாவிரதம் இருப்போம். மதுவிலக்குக்காக போராடிய தேமுதிக தலைவர் விஜயகாந்தை கூட்டணிக்காக சந்திக்கவில்லை. கூட்டணி குறித்து பின்னர்தான் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 150 இடங்களை பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

பேட்டியின்போது காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர், தமிழக காங்கிரஸ் மகளிரணி தலைவி விஜயதாரணி, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x