Published : 18 Feb 2020 04:51 PM
Last Updated : 18 Feb 2020 04:51 PM

தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யுமாறு ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளை மக்களுக்குத் தெரியப்படுத்தினால் என் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உள்ளாட்சித் துறை ஊழல் துறையாக மாறிவிட்டது. அதில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் ஊழலுக்குத் துணை போயிருப்பதாகவும், எம்.சாண்ட் வாங்கியதில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி முரசொலியில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வரும் 24-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று நேற்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தரப்பில் இன்று (பிப்.18) உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

"மாநகராட்சி டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் பல தகவல்களை வெளியிட்டது. இதேபோல் ஆற்றுமணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தி அரசு டெண்டர்களில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.

இதன் அடிப்படையிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் ஊழல் நடந்திருப்பது குறித்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிடப்பட்டது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர் வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும். அந்த வழக்கில் பிப்ரவரி 24-ம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" எனக் கோரி ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x