இலவச மின்சார இணைப்பு பெற தத்கல் திட்டத்தில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை- பேரவையில் அமைச்சர் தங்கமணி பதில்

இலவச மின்சார இணைப்பு பெற தத்கல் திட்டத்தில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை- பேரவையில் அமைச்சர் தங்கமணி பதில்
Updated on
1 min read

தமிழகத்தில் தத்கல் திட்டத்தில்இலவச மின்சார இணைப்புபெற யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுகஉறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘‘திமுக ஆட்சியின்போது விவசாயிகளுக்கு 40 ஆயிரம்இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டன.

கடந்த 3 ஆண்டுகளாக இலவச மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. தத்கல் திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்படுகிறது’’ என்றார்.

இதற்கு பதிலளித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது: கடந்த 2010-11-ம் ஆண்டில் 2 லட்சம் இலவச மின்இணைப்பு திட்டத்தை அறிவித்துஅதில் ஒரேயடியாக ஒரு லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த காலத்தில் மின்சாரம்தான் வரவில்லை. தத்கல் திட்டத்தை பொறுத்தவரை நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்து செயல்படுத்துகிறோம்.

தத்கல் திட்டத்தை செயல்படுத்துவதால் சீனியாரிட்டி பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தத்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த ஆண்டில் தத்கல் திட்டத்தில் 20 ஆயிரத்து 385 மற்றும் சீனியாரிட்டி பட்டியலில் இருப்பவர்களில் 10 ஆயிரம் பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டது.

2018-ம் ஆண்டு கஜா புயல் காரணமாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து 2019-ம் ஆண்டில் 20 ஆயிரம் பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சார இணைப்பைப் பொறுத்தவரை தற்போதுவரை 72 ஆயிரத்து 575 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 11 லட்சம் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால்தான் பட்ஜெட்டில் மின்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in