Published : 18 Feb 2020 07:07 AM
Last Updated : 18 Feb 2020 07:07 AM

சிஏஏ-வுக்கு எதிராக நாளை நடத்தவுள்ள முற்றுகை போராட்டத்துக்கு தடை கோரி மனு தாக்கல்: அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு

குடியுரிமை சட்டத்தை எதிர்த்துமுஸ்லிம் அமைப்புகள் நாளை(பிப்.19) நடத்தவுள்ள சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நாளை (பிப்.19) சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முற்றுகைப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த இந்திய மக்கள் மன்றத் தலைவரான வாராகி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘குடியுரிமை சட்டத்துக்கு எதிரான முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தில் திட்டமிட்டு அதிகமாக குழந்தைகளும், பெண்களும் பங்கேற்க வைக்கப்படுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.

இந்தப் போராட்டங்களால் பொதுமக்களின் அன்றாட இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், பிப்.19-ல் சட்டப்பேரவையை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே வண்ணாரப்பேட்டையில் தேவையில்லாத அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளித்தால் அது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் மனுதாரர் சார்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள்,

‘‘இதுதொடர்பாக மனுதாக்கல் செய்யப்பட்டு முறைப்படி பட்டியலிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x