Published : 18 Feb 2020 06:58 AM
Last Updated : 18 Feb 2020 06:58 AM

பணியிடமாற்றம் செய்து பழிவாங்குவதா?- தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த ஆண்டில் ஆர்ப்பாட்டம், தர்ணா, மனிதசங்கிலி உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இதையடுத்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி, கடந்த ஆண்டு அக். 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது. முதல்வர் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று நவ. 1-ம் தேதி அனைவரும் பணிக்குத் திரும்பினர்.

இதன் தொடர்ச்சியாக, போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண் டாக்டர்கள் உட்பட 118 பேர் கிராமப்புறம் மற்றும் மலைப் பிரதேச பகுதி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜி) மாநிலத் தலைவராகவும் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த டாக்டர் லட்சுமி நரசிம்மனும் ஒருவர். இவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டார். இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர் மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில், பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்து, அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு டாக்டர்கள் கூறியதாவது: முதல்வரும் அமைச்சரும் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் உறுதி அளித்தனர். அந்த நம்பிக்கையில் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால், பழிவாங்கும் நோக்கத்தில் டாக்டர்கள் வேண்டும் என்றே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை திரும்பப்பெறுமாறு பலமுறை அரசை வலியுறுத்தியும் நிறைவேற்றவில்லை.

இந்தியாவில் தமிழகம்தான் சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று முதல்வரும் அமைச்சரும் பெருமையாக பேசுகின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களைவிட இங்குதான் டாக்டர்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர். நியாயம் கேட்டு போராடினால் அரசு பழிவாங்கும் போக்கை கடைபிடிக்கிறது.

எனவே, திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஜி பொதுக்குழுக் கூட்டத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. என்ன மாதிரியான போராட்டம் என்பதை சேலத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x