Published : 17 Feb 2020 05:39 PM
Last Updated : 17 Feb 2020 05:39 PM

தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் சம்மன்

ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்த கருத்துகள் தொடர்பாக 3-வது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் 3 வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலின்படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஸ்டாலினின் பேட்டி முரசொலி நாளிதழில் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி வெளியானது.

அதேபோன்று, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடைய முகநூல் பக்கத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து, டிசம்பர் 30-ம் தேதி முரசொலி நாளிதழில் வெளியானது.

இந்த இரு சம்பவங்களிலும், முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஸ்டாலின் அவதூறு கருத்துத் தெரிவித்துள்ளதாக தமிழக முதல்வர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசியுள்ள ஸ்டாலினை, அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இதுதவிர உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ஸ்டாலின் பேசிய கருத்துகள் தொடர்பாகவும் அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த மூன்று அவதூறு வழக்குகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதல் இரண்டு அவதூறு வழக்குகளில் மார்ச் 4-ம் தேதி அன்றும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி கருத்து தெரிவித்தது குறித்து தொடரப்பட்ட 3-வது அவதூறு வழக்கில் பிப்ரவரி 24-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x