Published : 17 Feb 2020 07:48 AM
Last Updated : 17 Feb 2020 07:48 AM

தமிழகத்தில் 3 ஆண்டில் 300 ஆண்டுக்கான வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்

ஆர்.பி.உதயகுமார்

மதுரை

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 300 ஆண்டுக்கான வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் பழனிசாமி கொண்டு வந்து சாதனை படைத்துள்ளார் என வருவாய்த்துறைஅமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இஸ்லாமியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளும், அரசுப் பிரதிநிதிகளும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மாநகராட்சி, நகராட்சித் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்குக் கூடுதலாகவே கிடைக்கும். ஜெயலலிதாவின் அரசு சாதி, மத பேதமற்றது. குடியுரிமைச் சட்டம்பற்றி தெரிந்தவர்கள் அமைதியாக உள்ளனர். தெரியாதவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஜெ.வைவிட வேகம்

ஜெயலலிதா இல்லாதபோதிலும் குறையே தெரியாத அளவுக்கு மக்களுக்கான நலத் திட்டங்களை முதல்வர் பழனிசாமி நிறைவேற்றி உள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 300 ஆண்டுக்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்து அவர் சாதனை படைத்துள்ளார்

அதிமுக ஆட்சி நிலைக்குமா எனக் கேட்டவர்கள் மத்தியில், நிதானமாக, பொறுமையாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சாதனை படைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

ஜெயலலிதாவை விட வேகமாக, அவர் விரும்பிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நிதிநிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை எனக் குறிப்பிட்டிருந்தாலும், நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் அனைத்துத் திட்டங்களுக்கும் அட்சயப் பாத்திரம்போல கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x