Published : 17 Feb 2020 07:03 AM
Last Updated : 17 Feb 2020 07:03 AM

மாடு மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

திருவேற்காடு அருகே உள்ள வீரராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தீஷ் (19). இவர், நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பூந்தமல்லி-ஆவடி சாலையில், காடுவெட்டி அருகே சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த நந்தீஷின் மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட நந்தீஷ் படுகாயமடைந்தார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் நந்தீஷை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தீஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த, நந்தீஷின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், காடுவெட்டி பகுதியில், பூந்தமல்லி-ஆவடி சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், “காடுவெட்டி மற்றும் வீரராகவபுரம் பகுதியில் மாடுகளை வைத்து பராமரித்து வருவோர், அவற்றை சாலைகளில் விடுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு காடுவெட்டி பகுதியில் பைக்கில் சென்ற ஒருவர் மாட்டின் மீது மோதி உயிரிழந்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களில் சிலர் காயமடைந்துள்ளனர். ஆகவே, சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, உயிரிழப்புக்கு காரணமான உரிமையாளரை கைது செய்ய வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடம் விரைந்த திருவேற்காடு போலீஸார், “சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, மாடுகள் சாலையில் திரிவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் முடிவுக்கு வந்தது. மேலும், நந்தீஷ் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x