Published : 17 Feb 2020 07:01 AM
Last Updated : 17 Feb 2020 07:01 AM
கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் பீட்ரூட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.8-க்கு விற்கப்பட்டு வருகிறது.
நார்ச்சத்து மிகுந்த காய்கறியான பீட்ரூட்டில் மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட ஊட்டச் சத்துக்கள் மற்றும் சி, பி9 போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் பீட்ரூட் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் பீட்ரூட் கொண்டுவரப்படுகிறது.
மேலும், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்தும் பீட்ரூட் வருகிறது. கடந்த இரு வாரங்களாக வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக அதன் விலை கிலோ ரூ.8 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான தக்காளி, புடலங்காய் தலா ரூ.15, வெங்காயம், அவரைக்காய் தலா ரூ.30, சாம்பார் வெங்காயம், கத்தரிக்காய் தலா ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.21, வெண்டைக்காய், கேரட் தலா ரூ.25, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.10, பாகற்காய், பீன்ஸ் தலா ரூ.20, முருங்கைக்காய் ரூ.80, பச்சை மிளகாய் ரூ.15 என விற்கப்பட்டு வருகிறது.
பீட்ரூட் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் கூறும்போது, "பருவமழை முடிந்த பின்னர், பனிப்பொழிவு ஏற்படும் காலங்களில் பீட்ரூட் விளைச்சல் அதிகமாக இருக்கும். அதனால் தற்போது வரத்து அதிகரித்து, அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்துக்கு இதே நிலை நீடிக்கும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT