Published : 16 Feb 2020 02:00 PM
Last Updated : 16 Feb 2020 02:00 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி சார்பில் பெறப்பட்ட 2 கோடிக்கும் அதிகமான கையெழுத்து படிவங்கள்; குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன

சென்னை

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கப் படிவங்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் வகையில், 2020 பிப்ரவரி 2ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) முதல் பிப்ரவரி 8ஆம் தேதி (சனிக்கிழமை) வரை “கையெழுத்து இயக்கம்” நடத்திடுவது என்றும்; அப்படிப் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் - குடியரசுத் தலைவரை சந்தித்து அளித்து, தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என்று 24.1.2020 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

மக்கள் இயக்கமான கையெழுத்து இயக்கத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும், தங்கள் பேராதரவினை வழங்கிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் கூட்டம் வேண்டுகோளும் விடுத்தது.

அதனடிப்படையில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும், மக்கள் கூடும் இடங்களிலும் - வணிக நிறுவனங்களிலும் - கல்வி நிலையங்களிலும் - வீடுவீடாகவும் சென்று, அனைத்துத் தரப்பு மக்களிடமும் 2020 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை கையெழுத்து பெற்ற 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 கையெழுத்திட்ட படிவங்களை;

இன்று (16-2-2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகில், திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார்கள்.

மாபெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட இந்த கையெழுத்துக்கள் தமிழக மக்கள் மத்தியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கும் (சி.ஏ.ஏ.) - தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) - தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக உள்ள உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது.

ஆகவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து - இப்போதாவது மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றும் - என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். தயாரிக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும் நடவடிக்கைகளை, மேதகு குடியரசுத் தலைவர் ஜனநாயகத்தையும் - அரசியல் சட்டத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, அறிவுரையை வழங்கிடுவார் என்று தமிழகமே ஆவலுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x