Published : 15 Feb 2020 09:50 AM
Last Updated : 15 Feb 2020 09:50 AM

மாநில அரசின் பட்ஜெட்டுக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு: திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல்

தமிழக அரசின் பட்ஜெட் ஊக்கம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ள கோவை தொழில் துறையினர், அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் ஆர்.ராமமூர்த்தி: தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையிலும், நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது பாராட்டுக்குரியது. 2019-2020-ம் ஆண்டு தமிழக தொழில் துறைக்கான பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதம். இது அகில இந்திய பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் கூடுதலாகும். தொழில் துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு, சிறு, குறுந் தொழில் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு, தொழில்முனைவோர் புத்தாக்கத் திட்டத்தின்கீழ் 500 புதிய நிறுவனங்கள் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரவேற்கத்தக்கவை.

இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளைத் தலைவர் வி.லட்சுமிநாராயணசாமி: வரியில்லா பட்ஜெட் சமர்ப்பித்தமைக்காக தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். தொழில், வேளாண்மை, சமூக வளர்ச்சிக்கான திட்டங்கள், முத்திரைக் கட்டண வரி குறைப்பு, தொழிலாளர் நலனுக்கான திட்டங்கள் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை. எனினும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத் (டேக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ்: வட்டி மானியம், புதிய தொழில் தொடங்குவோருக்கான மானிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. அதேசமயம், தாய்கோ வங்கி மூலம் ரூ.10 லட்சம் வரை முதலீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான மானிய உச்சவரம்பு அதிகரிப்பு, கோவை மாவட்டத்தில் குறுந்தொழில்பேட்டை, மெட்ரோ திட்டம், போதுமான அளவுக்கு சிறு, குறுந் தொழில்களுக்கு நிதி ஒதுக்காதது ஆகியவை ஏமாற்றம் அளிக்கின்றன.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் (காட்மா) தலைவர் சி.சிவக்குமார்: இயந்திர முதலீட்டு மானிய உச்சவரம்பு அதிகரிப்பு, சிறு, குறுந் தொழில்களுக்கான நிதி அதிகரிப்பு, வங்கிக் கடனுக்கான வட்டி மானியம் அதிகரிப்பு, திறன் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை. கோவை மாவட்டத்தில் கூடுதல் தொழிற்பேட்டைகள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்: சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளுக்கு 70 சதவீத மானியம் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை. ஆனால், கோவையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைப்பது, உள்ளாட்சித் துறைகளுக்கான கொள்முதலை சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடமே செய்வது, மின் கட்டண மானியம், தொழில்முனைவோருக்கான பிரத்யேக குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி: அத்திக்கடவு-அவிநாசி திட்டம், நொய்யல் நதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. ஆனால், நீண்டகால கோரிக்கையான பாண்டியாறு-புன்னம்புழா திட்டம், தமிழக அளவிலான நதி நீர் இணைப்பு திட்டம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டங்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு, கால்நடை வளர்ப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் எதுவுமே ஏற்கப்படவில்லை. இவை விவசாயிகளுக்கு வருத்தம் அளிக்கின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x