Published : 15 Feb 2020 08:01 AM
Last Updated : 15 Feb 2020 08:01 AM

முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத்(67) உடல் நலக்குறைவால் நேற்று மாலை மரணமடைந்தார்.

பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் 2001-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளத்துறைஅமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பிரசாத். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இரு நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் அனந்தபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்று மாலை மரணம் அடைந்தார்.

ராஜேந்திர பிரசாத் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோட்டை சேர்ந்தவர். தக்கலைபனைவிளையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அல்போன்சாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திர பிரசாத்தின் உடல் அவரது சொந்த ஊரான இடைக்கோட்டில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

முதல்வர் இரங்கல்

தமிழக முதல்வர் கே. பழனி சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான கே.பி. ராஜேந்திரபிரசாத் உடல் நலக்குறைவால் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்த முற்றோம். அதிமுக மீதும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை, தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x