Published : 15 Feb 2020 07:38 AM
Last Updated : 15 Feb 2020 07:38 AM

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே டாஸ்மாக்கில் துப்பாக்கி காட்டி கொள்ளையடிக்க முயற்சி: 2 இளைஞர்கள் கைது

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

துவாக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு பிப். 12-ம் தேதி இரவு வந்த இருவர், பணம் இல்லாமல் மதுபானம் கேட்டு தகராறு செய்ததுடன், கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அந்த நேரத்தில் மதுபானம் வாங்க சிலர் வந்ததால், இருவரும் தப்பியோடி விட்டனர்.

இதுதொடர்பாக டாஸ்மாக்மதுபானக் கடை மேற்பார்வையாளர் முருகதாஸ் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் காந்திமதி தலைமையிலான போலீஸார் அண்ணா வளைவு அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இருவரும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மீனாட்சிநாதபுரத்தைச் சேர்ந்த செபாஸ்டின்(28), திசையன்விளை ராதாபுரத்தைச் சேர்ந்தமுருகன்(29) என்பது தெரியவந்தது.

இருவரும் நாங்குநேரி பகுதிடாஸ்மாக் மதுபானக் கடையில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பிப்.2-ம்தேதி பிணையில் வெளியே வந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மதுபானக் கடைகளில் கொள்ளையடிக்க இருவரும் முயன்றதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 2 தோட்டாக்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x