Published : 14 Feb 2020 05:15 PM
Last Updated : 14 Feb 2020 05:15 PM

”அதிமுகவின் இறுதி பட்ஜெட் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது”-கே.எஸ்.அழகிரி

தமிழக அரசின் நிதி நிலைமை குறிப்பாக, கடன் சுமையின் காரணமாகவும், அதற்காக செலுத்தப்படுகிற வட்டியினாலும் வளர்ச்சித் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை என்பதை நிதிநிலை அறிக்கையில் காண முடிகிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழக அரசின் நிதிநிலைமை அதல பாதாளத்தை நோக்கி வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிற நிலையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருக்கிறார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் புதுமையான அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களோ, புதிய தொழிற்சாலைகளுக்கான அறிவிப்புகளோ இல்லை.

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்ததைத் தவிர, அதற்கான நிதி ஒதுக்கீடுகளோ, அதுகுறித்த குறிப்புகளோ நிதிநிலை அறிக்கையில் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை கண்துடைப்பு அறிவிப்புகள் தான் அதிகம் காணப்படுகின்றன.

தமிழக அரசின் நிதிநிலையைப் பார்க்கிற போது, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ரூபாய் 17 லட்சத்து 26 ஆயிரத்து 681 கோடியாகவும், கடன் ரூபாய் 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடியாகவும் இருந்தது. தற்போது, நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடு ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரத்து 992 கோடி. இதில் ஊதியமாக ரூபாய் 64 ஆயிரத்து 208 கோடியும், மானியமாக ரூபாய் 94 ஆயிரத்து 99 கோடியும் வழங்க வேண்டிய நிலையில் நிதிநிலைமை இருக்கிறது.

எனவே, இத்தகைய பற்றாக்குறை நிதிநிலைமையில் அதிமுக ஆட்சி செய்கிறது. ஏறத்தாழ தமிழக அரசின் நிதி நிலைமை குறிப்பாக, கடன் சுமையின் காரணமாகவும், அதற்காக செலுத்தப்படுகிற வட்டியினாலும் வளர்ச்சித் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை என்பதை நிதிநிலை அறிக்கையில் காண முடிகிறது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சியை ஏற்படுத்துவதையோ, வேலைவாய்ப்பை பெருக்குவதையோ, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையோ நோக்கமாகக் கொண்டு அமையாத நிலையில் அதிமுகவின் இறுதி பட்ஜெட் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது”.

இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x