Published : 14 Feb 2020 12:52 PM
Last Updated : 14 Feb 2020 12:52 PM

சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கு 70% மானியம்; உழவர்- அலுவலர் தொடர்புத் திட்டம்: வேளாண் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சூரிய சக்தி பம்புசெட்டுகள், உழவர்- அலுவலர் தொடர்புத் திட்டம் என தமிழக பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டைத் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

அவர் கூறும்போது, ''தமிழக மக்கள் தொகையில் 50% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு விவசாயமே முதன்மையான வாழ்வாதாரம். காவிரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தார். இது அதிமுக அரசு விவசாயிகள் மீது கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது'' என்றார்.

உரையில் நிதியமைச்சர் அளித்த அறிவிப்புகள்:

'' * நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறையானது 2020- 21 ஆம் ஆண்டில் 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.
* 11.1 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு நேரடி நெல் விதைப்பு முறை, நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
* தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி ஆகியவற்றில் அதிக விளைச்சல் மேற்கொள்ளப்படும்.
* நிலையான கரும்பு உற்பத்திக்கு ரூ.12 கோடி செலவில் 74,132 ஏக்கர் பரப்பளவில், நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்காக புதிய ரகங்கள் அறிமுகம்.
* கரும்பு விவசாயிகளுக்கு ரூ.68.35 கோடி சிறப்பு கூடுதல் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.75 கோடி ஒதுக்கீடு.
* கரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு உழவர்- உற்பத்தியாளர் திட்டத்துக்கு ரூ.100.56 கோடி நிதி.
* அடுத்த 3 ஆண்டுகளில் 250 ஏக்கர் கொண்ட 10 ஆயிரம் நிலத்தொகுப்புகள் தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.
* ரூ.180 கோடி நிதியில் 7.5 லட்சம் பரப்பளவு கொண்ட 3 ஆயிரம் நிலத்தொகுப்புகள் பயனடையும்.
* ரூ.20 கோடி நிதியில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லும் மேலாண்மை நடவடிக்கை.
* விவசாயிகள், துறை அதிகாரிகளைத் தொடர்புகொள்ள உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம்
* பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மாநில அரசின் பங்காக 724.14 கோடி ரூபாய் நிதியுடன் செயல்படுத்தப்படும்.
* இந்த கல்வியாண்டில் ரூ.1,844.97 கோடி செலவில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப் பாசனத்தின் மூலம் பயன்பெறும்.
* பயன் தரும் தோட்டக் கலைப் பயிர்களுக்கு ரூ.18 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். கடலூரில் முந்திரி, பெரம்பலூரில் வெங்காயம், தேனியில் முருங்கை, ஈரோட்டில் மஞ்சள், தென்காசியில் எலுமிச்சை, தூத்துக்குடியில் மிளகாய் ஆகிய மையங்கள் அமைக்கப்ப்படும்.
* தோட்டக் கலை சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு 325 மெட்ரிக் டன்கள் காய்கறி விதைகள் வழங்கப்படும்.
* ரூ.200 கோடி மதிப்பில் வட்ட அளவில் 100 மற்றும் கிராம அளவில் 250 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.
* தனித்தியங்கும் சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படும்''.

இவ்வாறு துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x