கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்த துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ், கடலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார்.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் கடந்த ஜன.9 அன்று பேரவையில் திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் 40 ஏக்கரில் மருத்துவக் கல்லூரி அமைக்க ஆணை வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடலூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ''கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,600 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை தொடங்க முதல் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பட்ஜெட் அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம், ''கடலூர் மருத்துவக்கல்லூரி குறித்த அறிவிப்பில் ஏற்கெனவே அறிவித்தபடி கடலூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்று நடத்தும். கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியாக அது செயல்படுத்தப்படும்'' என அறிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in