Published : 13 Feb 2020 08:44 PM
Last Updated : 13 Feb 2020 08:44 PM

மேயர் பதவியை பிடிப்பதில் ஆர்வம் காட்டும் அரசியல் கட்சிகள்: சென்னை மாநகராட்சி வருவாய் குறித்து ஏன் யோசிக்கவில்லை?- உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர், மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை வசூல் செய்ய விதிகளை வகுக்க சென்னை மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது. கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடிவெடுத்தது ஏன் ? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அப்போது எழுப்பிய நீதிபதிகள் அது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகவில்லை. அதுகுறித்து மாநகராட்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் கருத்து தெரிவித்த அமர்வு, சொத்துவரியை உயர்த்தாமல் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தூங்கி கொண்டிருக்கிறது என தெரிவித்தனர்.

20 ஆண்டுகளில் 4 முறை வரியை உயர்த்தி இருக்க வேண்டும், ஆனால் மேயர் பதவியை பிடிப்பதில் மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர் எனக் கருத்து தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியில் வசிப்பவர்களைவிட புறநகரில் வசிப்பவர்கள்தான் அதிகமாக சொத்து வரி செலுத்துகின்றனர். சொத்து வரியை உயர்த்தாததால்தான் வெளியூரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் எனத் தெரிவித்த நீதிமன்ற அமர்வு, சொத்துவரியை உயர்த்தாதது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x