Last Updated : 13 Feb, 2020 04:41 PM

 

Published : 13 Feb 2020 04:41 PM
Last Updated : 13 Feb 2020 04:41 PM

மனநலம் குன்றிய மகளின் கருவைக் கலைக்கக் கோரி தாய் தொடர்ந்த வழக்கு: அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தனது மனநலம் குன்றிய மகளின் கருவைக் கலைக்க அனுமதி கோரிய தாய் தொடர்ந்த வழக்கில், கருவை கலைக்க அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "என் கணவர் இறந்துவிட்டார். நான் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகளுக்கு 26 வயதாகிறது. அவர் சிறு வயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். மேலும் மனநலமும் சரியில்லை. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.

நான் ஆடு மேய்க்க காலையில் வீட்டை விட்டுச் செல்வேன். மாலையில் வீடு திரும்புவேன். இந்த நேரத்தில் என் 2-வது மகள் வீட்டில் தனியாக இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி பக்கத்தில் வீட்டில் வசிக்கும் முதியவர் காசி, என் மகளை பலாத்காரம் செய்தார். இதில் என் மகள் கர்ப்பமடைந்தார்.

சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து காசியை கைது செய்தனர். தற்போது என் மகள் 12 வார கருவை சுமக்கிறார். குழந்தையைப் பெற்றெடுக்கும் உடல் நிலை, மனநிலையில் அவர் இல்லை. எனவே என் மகளின் வயிற்றில் வளரும் 12 வார கருவை கலைக்க சிவகங்கை அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மகள் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ குழு முன்பு ஆஜராக வேண்டும். மருத்துவக்குழு மனுதாரரின் மகளை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி மனுதாரரின் மகளை பரிசோதித்து அரசு மருத்துக்குழு, அவர் வயிற்றில் 24 வார கரு உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து அப்பெண்ணின் வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க நீதிபதி புஷ்பா சத்தியநாராயண் இன்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x