Published : 13 Feb 2020 07:33 AM
Last Updated : 13 Feb 2020 07:33 AM

காதலர் தினத்துக்காக 2.50 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி: சர்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பால் ஓசூர் விவசாயிகள் மகிழ்ச்சி

மலர் ஏற்றுமதி மையமொன்றில் ரோஜா மலர்களை தரம் பிரித்து பார்சல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

ஓசூர்

காதலர் தினத்தையொட்டி ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 2.50கோடி எண்ணிக்கையிலான ரோஜாமலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் ஓசூர்ரோஜா மலர்களுக்கு தேவைஅதிகரித்துள்ளதால், மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஆண்டு முழுவதும் நிலவும் இதமான தட்பவெப்பநிலை மற்றும் மண் வளத்தால் தமிழகத்திலேயே ரோஜா மலர் உற்பத்தியில் இங்குள்ள விவசாயிகள் முன்னணியில் இருந்து வருகின்றனர்.

ஓசூர், தளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் ஆண்டுக்கு சுமார் 4 கோடி முதல் 5 கோடி ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் 75 சதவீதம் ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகியவிழாக் காலங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவதுடன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அரபுநாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சர்வதேச சந்தையில் ரோஜா மலர்கள் உற்பத்தியில் சீனா, இந்தியாவுக்கு போட்டியாகத் திகழ்கிறது. தற்போது சீனாவில் கரோனாவைரஸ் பாதிப்பு பிரச்சினை உள்ளதால், அங்கு ரோஜா மலர் ஏற்றுமதி முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஓசூர் ரோஜா மலர்களுக்கு சர்வதேச சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ளது எனதோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம்14-ம் தேதி வரும் காதலர் தினத்தைமுன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 1.50 கோடி முதல் 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகும். ஆனால், நடப்பு ஆண்டு இதுவழக்கத்தை விட அதிகரித்துள்ளது. 2.50 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகி உள்ள நிலையில், நல்லவிலையும் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்..

இதுகுறித்து தளியை அடுத்த சாரகப்பள்ளியில் பசுமைக்குடிலில் ரோஜா உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயி மஞ்சுநாத் ரெட்டி கூறியதாவது: சர்வதேச சந்தையில் ரோஜாமலர்கள் உற்பத்தியில் சீனாதான் நமக்கு போட்டியாக உள்ளது. தற்போது சீனாவில் கரோனா வைரஸ்பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்குரோஜா மலர் ஏற்றுமதி முடங்கியுள்ளது. இதனால், ஓசூர் ரோஜா மலர்களுக்கு சர்வதேச சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

ரோஜா மலருக்கான தேவை அதிகரித்துள்ளதால் மொத்த விலையில் தரத்துக்கு ஏற்ப ஒரு கட்டு (20 மலர்கள்) ரோஜாவை ரூ.150 முதல் ரூ.200 வரை வாங்கிச்செல்கின்றனர். ரோஜா ஏற்றுமதிஅதிகரித்துள்ளதால், இப்பகுதியில் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தளி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பி.சுப்பிரமணியன் கூறியதாவது:

நடப்பு ஆண்டில் காதலர்தினத்தையொட்டி ஓசூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு 2 கோடி முதல் 2.50 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 1.50 கோடி ரோஜா மலர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்து சொட்டு நீர் பாசனம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தரமான ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பசுமைக்குடில்களில் ‘தாஜ்மஹால்’ எனப்படும் சிவப்பு ரோஜா மலர்கள் உட்பட மொத்தம்30 வகையான ரோஜா மலர்கள் பயிரிடப்படுகின்றன. ஒரு மாதத்தில்ஓர் ஏக்கருக்கு 1 லட்சம் மலர்கள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன.

2019-20-ம் ஆண்டு காலகட்டத்தில் நல்ல மழைப் பொழிவு, சாதகமான தட்பவெப்பநிலை காரணமாக ரோஜா உற்பத்தி இரு மடங்குஅதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு கட்டு ரோஜா மலருக்குரூ.300 வரை விலை கிடைத்துள்ளதால் மலர் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x