Published : 12 Feb 2020 09:43 AM
Last Updated : 12 Feb 2020 09:43 AM

அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் 28 பேருக்கு பெற்றோர் முன்னிலையில் அறிவுரை

கோப்புப் படம்

சென்னை

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் மேலும் 3 மாணவர்களை கைது செய்த போலீஸார் 28 மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

சென்னை பிராட்வேயில் இருந்து மந்தைவெளிக்கு கடந்த 4-ம் தேதி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து சென்ட்ரல் அருகே செல்லும்போது, ராயபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களும் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் ஏறியுள்ளனர். இரு கல்லூரி மாணவர்களிடையே பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றி இருதரப்பும் மோதிக் கொண்டனர். உடனே பேருந்தை விட்டு கீழே இறங்கிய சில மாணவர்கள், பேருந்தை நோக்கி கற்களை வீசியுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்துள்ளது. பின்னர் கல்லூரி மாணவர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநர் பாலாஜி பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக கல்லூரி மாணவர்களான ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த சூர்யா,செங்குன்றம் நாரவாரி குப்பம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில், மாதேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் பூபதி, சுரேஷ்குமார், மணிகண்டன் ஆகிய மேலும் 3 பேரை நேற்று கைது செய்துள்ளனர். மேலும் தகராறில் ஈடுபட்டதாக 28 மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x