Published : 11 Feb 2020 09:33 PM
Last Updated : 11 Feb 2020 09:33 PM

கரோனா, டெங்கு- சென்னை மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கை என்ன? :அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

டெங்கு, கரோனா போன்ற வைரஸ்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகள் உள்ளதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி 2018-ம் ஆண்டு வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், டெங்குவை தடுக்க எடுத்த நடவடிக்கை, டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசுவை கண்டறிந்து ஒழிப்பது, சுகாதாரத்தை பின்பற்றாத வீடுகளுக்கு அபராதம், டெங்கு உயிரிழப்பு போன்றவை குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் சூரியபிரகாசம் கூடுதலாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த கூடுதல் மனுவில் கரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க எடுட்ட நடவடிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆயிரத்து 75 பேர் ஈடுபடுத்தபட்டனர், தினமும் 70 முதல் 80 வீடுகள் என்ற கணக்கில் ஆய்வுகளை மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்திலிருந்து முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டு வருகிறது”. எனத் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் திட்டமிடல் சரியாக உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் அந்த திட்டமிடல் எவ்வாறு செயல்படுத்தபடுகிறது என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர். மேலும் டெங்கு, கரோனா போன்ற நோய் பரப்பும் வைரஸ்களை தடுப்பதற்கு தற்போதுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக உள்ளதா? என்பது குறித்தும் இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x