18 நிமிடங்களில் 25 கி.மீ. தூரத்தைக் கடந்த ஆம்புலன்ஸ்: மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சென்னை கொண்டு வரப்பட்டது

18 நிமிடங்களில் 25 கி.மீ. தூரத்தைக் கடந்த ஆம்புலன்ஸ்: மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சென்னை கொண்டு வரப்பட்டது
Updated on
2 min read

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயத்தை சென்னைக்குக் கொண்டுவர, 18 நிமிடங்களில் 25 கிலோ மீட்டரைக் கடந்து விமான நிலையத்தை அடைந்தது ஆம்புலன்ஸ். சாலையில் ஏற்பட்ட தடைகளை போலீஸார் உடனடியாக அகற்றியதால், ஒன்றரை கிலோ மீட்டரை ஒரு நிமிடத்தில் கடந்து ஆம்புலன்ஸ் சென்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் விஜயகுமார். இவரது மனைவி ராணி. இவர்களின் மகன் சுரேந்திரன். கடந்த 8-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சுரேந்திரன் செல்லும்போது ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றமில்லை. இந்நிலையில் சுரேந்திரன் மூளைச்சாவு நிலையை அடைந்தார். இந்தத் தகவலை பெற்றோரிடம் கூறிய மருத்துவர்கள் சுரேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்தால் அவர் இறந்தும் உயிர் வாழ்வார், பலரது வாழ்க்கைக்கு விளக்கேற்றிய உதவி உங்கள் மகன் மூலம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விஜயகுமார், ராணி தம்பதிக்கு மகன் உயிரிழக்கப் போகிறான் என்கிற செய்தி பேரிடியாகத் தாக்கினாலும், மகனால் சில உயிர்கள் பிழைக்கும் என்கிற எண்ணத்தில் தங்களது மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர்..

இதையடுத்து, சுரேந்திரனின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட ஏழு உறுப்புகள் வெவ்வேறு இடங்களுக்குத் தானமாக வழங்கும் நடவடிக்கை தொடங்கியது. இதில் இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு தேவைப்பட்டது. சில மணிநேரங்களில் இதயம் சென்னை அடைய வேண்டும் இல்லாவிட்டால் பயனில்லை.

இதயம் இருப்பதோ சேலம் அருகே. செல்லவேண்டிய இடமோ சென்னை. விமானத்தில் கொண்டு செல்லப்படவேண்டும் என்றால் 25 கிலோ மீட்டரை உடனடியாகக் கடக்கவேண்டும். இதையடுத்து காவல்துறையின் உதவி கோரப்பட்டது. போலீஸார் நிலைமையை அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மருத்துவமனையிலிருந்து விமான நிலையம் செல்லும் தூரம் சாலை வசதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. சரியான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக மருத்துவமனையிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலைகள் போலீஸ் பாதுகாப்புக்குக் கொண்டுவரப்பட்டன.

ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு ஆங்காங்கே சாலையில் உள்ள தடைகள் குறித்துச் சொல்லி அகற்றப்பட்டன. பின்னர் இதயம் அகற்றப்பட்டு பாதுகாப்பான மருத்துவ உபகரணம் அடங்கிய பெட்டியில் வைக்கப்பட்டு, உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது. ஆம்புலன்ஸ் எவ்விதத் தடையுமின்றி விமான நிலையம் நோக்கி வேகமாகச் சென்றது.

ஓட்டுநர் சுப்புராஜ் மற்றும் உதவியாளர் நாகராஜ் ஆகியோர் 25 கிலோ மீட்டர் தூரத்தை 18 நிமிடங்களில் கடந்து இதயத்தை விமான நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் தயாராக இருந்த விமானத்தில் ஏற்றப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in