Published : 11 Feb 2020 10:04 AM
Last Updated : 11 Feb 2020 10:04 AM

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி: பிப்.14-ல் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, வரும் 14-ம் தேதிமத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.80 கோடி மோசடி செய்ததாக இவர் உள்ளிட்ட பலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, செந்தில்பாலாஜியும், அவரது சகோதரரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக நேற்று ஆஜராகி, ‘‘செந்தில்பாலாஜியை விசாரணைக்கு ஆஜராகக் கூறி சம்மன் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமே நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு விட்டது. எனவே முன்ஜாமீன் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும்’’ என முறையீடு செய்தார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘இந்தவழக்கு விசாரணைக்கு செந்தில்பாலாஜி பிப்.14-ம் தேதி, சம்பந்தப்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராக வேண்டும். அதேபோல முன்ஜாமீன் உத்தரவில் திருத்தம் கோருவது தொடர்பாக அரசு தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x