Published : 11 Feb 2020 09:39 AM
Last Updated : 11 Feb 2020 09:39 AM

பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க முயற்சி: சர்வதேச அளவில் தமிழர்களிடம் ஆதரவு திரட்ட ஒருங்கிணைப்பு குழு தொடக்கம்

உலகப் புகழ் பெற்ற, கல் கட்டுமான தொழில்நுட்பத்தின் உச்சமாக வானுயர்ந்து நிற்கும் தஞ்சாவூர் பெரிய கோயில்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் எட்டாவது அதிசயமாக இடம்பெறச் செய்வதற்காக ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளது.

மாமன்னன் ராஜராஜ சோழனால் கி.பி.1003-ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010-ம் ஆண்டு கட்டுமானம் நிறைவு செய்யப் பெற் றது தஞ்சாவூர் பெரிய கோயில். இந்தக் கோயில் சிமென்ட் பூச்சு போன்ற எதுவும் பயன்படுத்தாமல் அடுக்குமானம் என்ற முறையில் ஒரு கல்லுடன் மற்றொரு கல் என இணைக்கப்பட்டும், சுண்ணாம்பு போன்ற கலவைகளைப் பயன்படுத்தியும் கட்டப்பட்டு, காலங்களைக் கடந்து நிற்கும் தமிழககட்டுமானக் கலையின் உதார ணமாகும்.

கி.பி.10-ம் நூற்றாண்டில் கருங் கற்களை மட்டுமே கொண்டு 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட இந்தக் கோயில்தான் உலகிலேயே பெரிய கோயிலாகும். அதனால்தான் இதற்கு பெரிய கோயில் என பெயர் வந்தது.

சோழர் கால கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழும்இந்தக் கோயிலை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு கடந்த 1987-ம் ஆண்டுஅறிவித்து, பாதுகாத்து வருகிறது.மேலும், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இக்கோயிலை இந்திய தொல்லியல் துறை பழமை மாறாமல் பாதுகாத்து வருகிறது.

இந்தக் கோயில் கட்டப்பட்டது தொடங்கி தற்போது நடந்து முடிந்தது வரை 5 குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 5-ம் தேதி நடைபெற்ற குடமுழுக்கு விழா தொடங்கியது முதல் நிறைவு நாள் வரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து சென்றுள்ள நிலையில், இக்கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக ஒருங்கிணைப்பு பணி களும் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொல்லியல் கட்டு மான வல்லுநரும், இந்து சமய அறநிலையத் துறையின் பாரம்பரிய கட்டுமான கமிட்டி உறுப்பினரும், ‘தஞ்சாவூர் பெரிய கோயில்8-வது உலக அதிசயம்’ என்றகுழுவின் ஒருங்கிணைப்பாளருமான பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:

உலக அதிசயங்கள் ஏழு என்பார்கள், தற்போது 8-வது அதிசயமாக தஞ்சாவூர் பெரிய கோயிலை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலக அதிசயங்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் பெரிய கோயிலுக்கு உள்ளது. உலகிலேயே கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்ட மிக உயரமான கோயில்இது மட்டுமே. இந்தக் கோயிலின் கட்டுமானத்தின் சிறப்பு என்பதே அடுக்குமானம் என்ற புதுமையான ஒன்று என்பதுதான். மேலும் சிற்பங்கள், ஓவியங்கள் என கோயிலின் ஒவ்வொரு அம்சமும் பெருமைக்குரியவை எனலாம்.

எனவே, இதை உலக அதிசயங்களில் ஒன்றாக இடம் பெறச் செய்ய ‘தஞ்சாவூர் பெரியகோயில் 8-வது உலக அதிசயம்’என்ற அமைப்பு தொடங்கப்பட் டுள்ளது. தஞ்சை மண்ணைச் சேர்ந்த பொறியாளர்கள், மருத் துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கிஉள்ளோம்.

இதற்காக பிரத்யேக இணைய தளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதில், ஆதரவு திரட்டப்படும். மேலும், விரைவில் சர்வதேச அளவில் தமிழர்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை உலக அதிசயங்கள் பட்டியலை அறிவிக்கும் அமைப்பிடம் வழங்க உள்ளோம். இதற்கான பணிகளை குடமுழுக்கு விழாவின்போதே தொடங்கி விட்டோம் என்றார். வி.சுந்தர்ராஜ்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x