மோசடியை கண்டித்து போராட்டம்: மதுரை சின்னப்பிள்ளை உட்பட 50 பேர் கைதாகி விடுதலை

பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மதுரை சின்னப்பிள்ளை உள்ளிட்ட சுயஉதவிக் குழுவினர்.
பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மதுரை சின்னப்பிள்ளை உள்ளிட்ட சுயஉதவிக் குழுவினர்.
Updated on
1 min read

சேலத்தில் களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.பல லட்சம் முறைகேடு செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை சின்னபிள்ளை தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் அவர் உட்பட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் 12 வட்டாரங்களில் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 5 ஆயிரம் குழுக்களில் 52 ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவை நடத்திவரும் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள், மகளிர் குழுவில் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர்.

பத்ம விருது மற்றும் தமிழக அரசால் ஒளவையார் விருது பெற்ற மதுரை சின்னபிள்ளை தலைமையில் திரண்ட களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் மதுரை சின்னபிள்ளை உட்பட 5 பேரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர். அவர்கள் மனு அளித்த பின்னர், மகளிர் குழுவினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சேலம் டவுன் போலீஸார், மதுரை சின்னபிள்ளை உட்பட 50 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in