Last Updated : 07 Feb, 2020 03:44 PM

 

Published : 07 Feb 2020 03:44 PM
Last Updated : 07 Feb 2020 03:44 PM

இறந்தவர்களின் ஆதார் எண்கள் சேகரிப்பு: நாட்டிலேயே முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் சோதனை முயற்சி

விருதுநகர்

உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பதை நாட்டிலேயே முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், இறந்தவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பது குறித்தும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் துணை இயக்குநர் சந்தானகோபால் விருதுநகர் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்காண்டார்.

.முன்னதாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "தமிழகத்தில் ஆதார் எண் பெறாதவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். தமிழக அரசு ஆதரவோடு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளுக்கு ஆதார் கிட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கள ஆய்வு நடத்தப்படுகிறது. 5 வயது முடிந்த பிறகும் 15 வயது முடிந்த பிறகும் குழந்தைகள் தங்களது ஆதார் எண்ணில் கைரேகை, கண் பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம். புதுப்பித்துக்கொள்ள 2 ஆண்டு கால அவகாசமும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 28 லட்சம் பேருக்கு ஆதார் எண் கொடுக்கப்பட வேண்டி உள்ளது. பெரியவர்களில் சுமார் 99.5 சதவிகிதம் பேர் ஆதார் அட்டை வாங்கிவிட்டனர்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும்போது கைரேகை மற்றும் கண் பதிவைக் கேட்பதில்லை. 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே இவை சேகரிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் குழந்தைகளக்கு ஆதார் அட்டை கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக பள்ளிகளில் மாணவர்களுக்காக மட்டுமே ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 770 பள்ளிகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் 55 பள்ளிகளிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம் என்பதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலமாகவும், குறுந்தகவல்கள், சமுதாய வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கு 25 வகையான சான்றுகளில் ஒன்றை சமர்பித்தாலே போதுமானது. ஆதார் அட்டையை அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிற நிறுவனங்களில் பயன்படுத்தக் கூடாது. ஆதார் எண் தேவைப்படும் இடங்களில் எங்களது வலைதளத்தின் முலம் 16 இலக்க வெர்சுவல் எண்ணைப் பெற்று அதைக் கொடுக்கலாம்.

ஆதார் எண் கொடுக்க வேண்டியதில்லை. ஆதார் அட்டை நகல்களை யாரிடமும் கொடுக்க வேண்டாம். தேவை ஏற்பட்டால் ஆதார் எண்ணின் முதல் 8 எண்களை மறைத்துவிட்டு மற்ற எண்ணைப் பயன்படுத்தலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் 128 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் ஆதார் எண்களை நாங்கள் சேகரிக்கவில்லை. மக்கள் முறையாக எங்களிடம் தெரிவிக்கவில்லை.

எனவே, இறந்தவர்களின் ஆதார் அட்டையை சேகரிக்கும் சோதனை முயற்சி இந்தியாவில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவே முதன்முறை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x