Published : 06 Feb 2020 04:04 PM
Last Updated : 06 Feb 2020 04:04 PM

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை

அமைச்சர்களின் செயல்களை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் இன்று (பிப்.6) தொடங்கியது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முகாமைத் தொடங்கி வைக்க முதுமலை வந்தார். முகாம் தொடங்கி வைக்கும் முன்னர் அங்குள்ள கோயிலில் பூஜைக்கு அழைக்கப்பட்டார்.

கோயிலுக்குள் செல்வதற்காக காலணியைக் கழற்ற முனைந்தார். அப்போது, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பழங்குடியினச் சிறுவனை அழைத்தார். ஏதாவது கேட்க அழைக்கிறார் எனத் தயங்கிய சிறுவனை, தனது காலணியைக் கழற்றி விடச் சொன்னார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது நின்றிருந்தனர். இதைப் பார்த்த குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்து விடாதபடி மறைத்து நின்றுகொண்டார்.

வனத்துறை அமைச்சரின் இந்தச் செயல் அங்கிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தைகள் நல ஆர்வலர்களிடையே அமைச்சரின் சர்ச்சையான செயல் விவாதப் பொருளானது.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனை தன்னுடைய பேரனாக நினைத்து அப்படி செய்யச் சொன்னதாகக் கூறினார். அதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இது போன்று ஒரு அமைச்சர் மட்டுமல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய பல அமைச்சர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஜெயக்குமாராக இருந்தாலும், ராஜேந்திர பாலாஜியாக இருந்தாலும், அவர்கள் தான் எந்த உறுதிமொழியுடன் பதவியேற்றார்களோ, அதை மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனுடைய, உச்சமாக இன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இவ்வாறு செய்திருக்கிறார். இதனை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x