Published : 05 Feb 2020 11:23 AM
Last Updated : 05 Feb 2020 11:23 AM

சிஏஏ விவகாரம்: மாணவர்களைத் தூண்டி விடுகிறார்கள்; முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: ரஜினி பேட்டி

சிஏஏ விவகாரம் தொடர்பாக மாணவர்களைத் தூண்டி விடுகிறார்கள். அதனால் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. மேலும் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சிஏஏ தொடர்பாக ரஜினி எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார். இன்று (பிப்ரவரி 5) காலை சென்னையில் தனது இல்லத்திலிருந்து வெளியே கிளம்பும்போது அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி.

அப்போது, "சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. நீங்கள் எதுவுமே கருத்து கூறவில்லை. உங்களுடைய கருத்து என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு ரஜினி பதில் அளித்துப் பேசியதாவது:

"என்பிஆர் ரொம்பவே முக்கியம். 2010 மற்றும் 2015-ம் ஆண்டு காங்கிரஸ் செய்தது. 2021-ல் இந்திய நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துதான் ஆகவேண்டும். அதில் யார் உள்நாட்டுக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டாமா? அது ரொம்பவே முக்கியம். அதனால் என்ன பிரச்சினை என்று தெரியாது.

பீதி கிளப்பிவிட்டார்கள்

என்ஆர்சியை இன்னும் அமல்படுத்தவில்லை. அதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். அது சரியாக இருக்குமா என்பது எல்லாம் பார்த்துதான் முடிவு செய்வார்கள். சிஏஏ தொடர்பாகத் தெளிவாக இந்திய மக்களுக்கு எவ்விதப் பிரச்சினையுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்களுக்குக் கொடுப்பதா, வேண்டாமா என்பது தான் பிரச்சினை. முக்கியமாக முஸ்லிம்களுக்குப் பெரிய அச்சுறுத்தல் என்று பீதியைக் கிளப்பிவிட்டார்கள். அது எப்படி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாகும்.

முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன்

இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால், பிரிவினைக் காலத்தில் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று சென்றார்கள். இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் இதுதான் நம் நாடு, ஜென்ம பூமி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி இந்த நாட்டிலிருந்து வெளியே அனுப்புவார்கள்.

அந்த மாதிரி ஒன்று நடந்தால் இந்த ரஜினிகாந்த் அவர்களுக்காக முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சியினர் அவர்களுடைய சுய லாபத்துக்காகத் தூண்டி விடுகிறார்கள். இதற்கு மதகுருக்களும் துணை போகிறார்கள். இது ரொம்ப தப்பான விஷயம்.

மாணவர்களை அரசியல்வாதிகள் உபயோகிக்கப் பார்ப்பார்கள்

முதலில், மாணவர்களுக்குச் சொல்லிக் கொள்வது எல்லாம் போராட்டத்தில் இறங்கும் போது தீர யோசித்து ஆராய்ந்து, பேராசிரியர்களிடம் பேசி இறங்குங்கள். இல்லையென்றால் உங்களை அரசியல்வாதிகள் உபயோகிக்கப் பார்ப்பார்கள். அப்படி இறங்கிவிட்டால் உங்களுக்குத் தான் பிரச்சினை. காவல்துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது. எஃப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால் வாழ்க்கையையே முடிந்து போய்விடும்".

இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

அப்படியென்றால் சிஏஏவில் இலங்கை அகதிகள் நிலை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ரஜினி பதில் அளிக்கையில், "இலங்கை அகதிகள் இங்கு பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இலங்கையில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. ஏனென்றால் அவர்கள் சோழர்கள் காலத்திலிருந்து அங்கு இருக்கிறார்கள்" என்றார் ரஜினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x