Published : 02 Aug 2015 01:40 PM
Last Updated : 02 Aug 2015 01:40 PM

தாயால் கொல்லப்பட்ட பெண் குழந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கணவர் மீதான விரக்தியில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றதோடு தானும் குடித்து தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை நேற்று தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(46). தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் இவருக்கு கருப்பக்கோன்பட்டியைச் சேர்ந்த நவநீதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் நவநீதம் இறந்துவிட்டார். இதையடுத்து குளத்தூரைச் சேர்ந்த ரேகாவுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள்.

இந்நிலையில் செல்வம், ரேகா தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ரேகா கடந்த வாரம் மகள் பிரியதர்ஷினி(7), மகன் நெல்சன் மண்டேலா(5) ஆகியோருடன் குளத்தூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

மனஉளைச்சலுக்குள்ளான ரேகா, மகனுக்கும், மகளுக்கும் எலிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் விஷத்தைக் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். 3 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜூலை 30-ம் தேதி பிரியதர்ஷினி இறந்துவிட்டார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து குளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் கீரனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த பிரியதர்ஷினியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் கோட்டைக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் வடகாடு போலீஸாரின் பாதுகாப்புடன் ஆலங்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் சுந்தரவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் கோட்டைக்காட்டில் புதைக்கப்பட்ட பிரியதர்ஷினியின் உடலை நேற்று தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் செல்வத்தை கீரனூர் போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x