Published : 04 Feb 2020 08:11 AM
Last Updated : 04 Feb 2020 08:11 AM

யாகசாலை பூஜையை 2 லட்சம் பேர் பார்வை; பெரிய கோயிலில் நாளை குடமுழுக்கு: விழாக்கோலம் பூண்டது தஞ்சை மாநகரம்

பெரிய கோயில் குடமுழுக்கு விழா நாளை நடப்பதையொட்டி தஞ்சாவூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. யாகசாலை பூஜைகளை நேற்று மதியம் வரை 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா நாளை (பிப்.5) நடைபெறவுள்ளது.

இதையொட்டி கடந்த 1-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகளும், நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த யாகசாலைக் கூடத்தில் நடைபெற்றுவரும் யாகசாலை பூஜையைப் பார்ப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்தவண்ணம் உள்ளனர். அதன்படி, கடந்த 1-ம் தேதி 50 ஆயிரம் பேரும், 2-ம் தேதி 1 லட்சத்து 25 ஆயிரம் பேரும், நேற்று மதியம் வரை 30 ஆயிரம் பேரும் வந்து சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குடமுழுக்கு விழாவுக்காக பெரிய கோயிலைச் சுற்றிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதால், இருசக்கர வாகன போக்குவரத்து மேம்பாலம் முதல்சோழன் சிலை வரை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வாகனங்களில் வரும் பக்தர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து கோயிலுக்கு வருகின்றனர்.

கோயிலுக்குள் செல்லும் வழியில் மராட்டா நுழைவு வாயிலில்பக்தர்களும் அவர்கள் கொண்டுவரும் உடமைகளும் ஸ்கேன் மூலம் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேலவீதி, வடக்குவீதி ஆகிய இடங்களில் 3 திருமண மண்டபங்களில் காலை, மாலை சிற்றுண்டியும் மதியம் உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல சீனிவாசபுரத்தில் உள்ளதிருமண மண்டபத்தில் சிவாச்சாரியார்களுக்கும், மேலவீதியில் உள்ளஒரு திருமண மண்டபத்தில் ஓதுவார்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவு மாதிரிகளை உடனுக்குடன் சோதனை செய்ய தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தலைமையில் 22 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அன்னதானம் வழங்கநேற்றுவரை 24 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிய பேருந்து நிலையம், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், தொல்காப்பியர் சதுக்கம், கரந்தை உமாமகேஸ்வரனார் கல்லூரி ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

மேலும், 11 இடங்களில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கு இடவசதி செய்து தரப்பட்டு உள்ளது.

பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர்மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சைக்கு வந்து சென்றவண்ணம் உள்ளனர்.

போலி அடையாள அட்டை

பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்று போலி அடையாள அட்டைகள் பயன்பாட்டைத் தடுக்கவும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பார்கோடை ஸ்கேன் செய்வதற்கென, 8 இடங்களில் 18 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வி.சுந்தர்ராஜ்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x