Published : 05 Aug 2015 09:10 PM
Last Updated : 05 Aug 2015 09:10 PM
சசிபெருமாள் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவரது மூத்த மகன் எஸ்.விவேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்டம், இ-மேட்டுக்காட்டைச் சேர்ந்த எஸ்.விவேக் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை சசிபெருமாள், கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைகடை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்தார். எனது தந்தை இறந்த செய்திகேட்டு மார்த்தாண்டம் சென்றேன். அவரது முகத்தை பார்க்க அனுமதித்த காவல்துறையினர், முதல் தகவல் அறிக்கையை கொடுக்க மறுத்துவிட்டனர்.
என் தந்தையின் கழுத்து, மார்பு பகுதியில் காயங்கள் இருந்தன. அவர் உயிரைக் காப்பாற்ற காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் முயற்சி எடுக்கவில்லை. செல்போன் கோபரத்தில் ஏறி அவர் போராட்டம் நடத்திய அந்த 6 மணி நேரம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
அதிகாரிகளின் மெத்தனத்தாலே அவர் இறக்க நேரிட்டது. அவரது சாவில் சந்தேகம் இருப்பதால் உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் டி.சிவஞானசம்பந்தன் வாதாடினார். அதையடுத்து மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசு தலைமை செயலர், உள்துறை செயலர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT