Published : 03 Feb 2020 02:55 PM
Last Updated : 03 Feb 2020 02:55 PM

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தத் தடை கோரிய மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கல்வி நிறுவன வளாகங்களிலோ, பொது இடங்களிலோ மாணவர்கள் போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், ''பருவத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தால் அவர்களின் படிப்பு மட்டுமல்லாமல், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

அரசியல் கட்சியினரால் மூளைச் சலவை செய்யப்பட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாகச் செயல்படும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இதுபோன்ற போராட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள், மவுன பார்வையாளர்களாக வேடிக்கை பார்க்கின்றனர். தங்கள் குறைகளை ஒன்றுகூடி தெரிவிக்க அரசியல் சாசனம் உரிமை தந்திருந்தாலும், அது மற்ற அப்பாவி மாணவர்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை இன்று (பிப்.3) விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மார்ச் 2-ம் தேதிக்குள் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கும், தமிழக டிஜிபி, சென்னை மாநகர ஆணையர், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x