Published : 03 Feb 2020 12:49 PM
Last Updated : 03 Feb 2020 12:49 PM
அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திமுகவைத் தோற்றுவித்தவரும் முன்னாள் முதல்வருமான அண்ணாவின் 51-வது நினைவு நாளான இன்று (பிப்.3) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் முடிந்தது. பின்னர், அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அண்ணாவின் நினைவு நாளையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்களால், "எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய் அண்ணா!" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"அரசியல் அறத்தைப் போதித்த காஞ்சி தந்த வள்ளுவன்-
கொள்கை உரத்தை ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்-
அண்ணாவின் 51-வது நினைவு நாள் இன்று!
அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?
அவரது குரலும், கொள்கையும், கோட்பாடும் வாழ்க்கையும், வாழ்த்தும் என்றும் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறது.
அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்".
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மேலும், இப்பதிவுடன் பத்ம விருது பெறும் அனைவருக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT