Last Updated : 03 Feb, 2020 08:53 AM

 

Published : 03 Feb 2020 08:53 AM
Last Updated : 03 Feb 2020 08:53 AM

போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் பெண்கள் தங்கும் விடுதிக்கு உரிமம் வழங்குவதில் சிக்கல்: நீடிப்பு விதிகளை தளர்த்த உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை

போதிய ஆவணங்கள் தாக்கல்செய்யப்படாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு உரிமம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பிற மாவட்டங்களில் இருந்து படிப்பு, வேலை நிமித்தமாக வரும் பெண்கள் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் செயல்பட்டு வந்தபெண்கள் தங்கும் விடுதியில் குளியல் அறை, படுக்கை அறை உள்ளிட்டவற்றில் சிறிய அளவிலான கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த செய்தி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து, விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

அப்போது, பெண்கள் தங்கும் விடுதிகளின் பாதுகாப்பும், நம்பகத் தன்மையும் கேள்விக்குறியாகியது. மேலும், பெரும்பாலான தங்கும் விடுதிகள் உரிமம் இன்றி செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து, பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற விண்ணப்பிக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம்வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை பரிசீலனை செய்ததில் போதிய ஆவணங்களின்றி தாக்கல் செய்ததாக 1,058 விடுதிகளுக்கு உரிமம் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் 16 விடுதிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை விடுதி உரிமையாளர்கள் நல சங்க செயலாளர் கே.எஸ்.மனோகரன் கூறியதாவது:

தமிழ்நாடு பெண்கள் தங்கும் விடுதிகள் மற்றும் காப்பகம் விதிகளின்படி, பெண்கள் தங்கும் விடுதியின் அறை குறைந்தது 120 சதுர அடி பரப்பளவு இருக்க வேண்டும். ஒரு அறையில் ஒரு நபர் தான் தங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 2 அல்லது 3 பேர் 120 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் வசித்து வருகின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் 120 சதுர அடி பரப்பளவில் ஒரு நபர் மட்டும் தங்குவது சாத்தியமில்லை. தமிழகம் முழுவதும் பெரு நகரங்களிலும் இதே சிக்கல்தான் நீடித்து வருகிறது. எனவே, விதிகளை தளர்த்தஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக, சமூக நலத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "விடுதிகளின் உரிமையாளர்கள் கட்டிட உறுதி தன்மை, சுகாதாரம், பாதுகாவலர் பின்னணி உள்ளிட்ட ஆவணங்களை சமர்பித்துள்ளனர். இந்த ஆவணங்களைப் பெற்ற பிறகு வருவாய்த் துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து கட்டிட உறுதித் தன்மை, தீ பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு அந்தந்த துறையிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா, 120 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் ஒரு நபர்தான் தங்குகிறாரா, என்பதையெல்லாம் உறுதிப்படுத்தி டி-உரிமம் என்ற ஆவணத்தை வழங்குவார்கள்.

விதிகளுக்கு மாறாக 120 சதுர அடி அறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தங்கும் விடுதிகளுக்கு டி-உரிமம் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு, டி-உரிமத்தை இணைக்காத காரணத்தால் சென்னையில் 1,058 விண்ணப்பங்கள் உரிமம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்த ஆவணத்தையும் இணைத்து விண்ணப்பித்தால்தான் உரிமம் வழங்க முடியும். இந்தவிவகாரம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விதிகளைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்"என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x