Published : 02 Feb 2020 02:39 PM
Last Updated : 02 Feb 2020 02:39 PM

நீலிக் கண்ணீர் வடிக்கும் மத்திய பட்ஜெட்: முத்தரசன் கருத்து 

சென்னை

குரு பீடத்தின் மீது உள்ள விசுவாசத்தை மறைத்துவிட்டு, நாட்டின் பிரச்சினைகள் மீது தீர்வு காண முயல்வதாக மத்திய பட்ஜெட் நீலிக் கண்ணீர் வடிக்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது குறித்து இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020 - 21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளைச் சமர்ப்பித்து, நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்துள்ளார். நிதியமைச்சர் நீண்ட உரையாற்றி சாதனை படைத்துள்ளார். ஆனால், அவரது உரையில் நாடு எதிர் கொண்டு வரும் சமூக,பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் எந்த முயற்சியும் காணப்படவில்லை.

நாட்டின் சுயாதிபத்தியத்தின் ஆணி வேராக விளங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்கிறது. மக்கள் நம்பிக்கையைப் பெற்று, லாபமீட்டும் நிறுவனமாகச் செயல்பட்டு, நாட்டின் இன்றியமையாத் தேவைகளுக்குப் பெரும் தொகையை முதலீடு செய்துள்ள , பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (LIC) தனியாருக்கு விற்பதில் நிதிநிலை அறிக்கை ஆர்வம் காட்டியுள்ளது .

விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களுக்காக ரூபாய் 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கியும், அதில் ரூபாய் 15 லட்சம் விவசாயிகளுக்குக் கடன் வழங்க ஒதுக்கியும் விவசாயிகள் நண்பனாக வேடம் போடுகிறது நிதிநிலை அறிக்கை . அதேசமயம் ,ஒட்டு மொத்த விவசாயத்தையும் பன்னாட்டுக் குழும நிறுவனங்களிடம் (கார்ப்பரேட் கம்பெனிகள்) அடகு வைக்கும் வஞ்சக வலையையும் விரித்துள்ளது.

சாலை போக்குவரத்துக் கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு, எரிவாயு குழாய் பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு போன்றவை பெரும் தனியார் நிறுவனங்கள் லாபமீட்டும் திட்டங்களாகவே முடியும். கரோனா வைரஸ் போன்ற புதுப்புது வியாதிகள் தோன்றி, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் முழுவதையும் குழும நிறுவனங்களிடம் விட்டு விடுவது ,மனித வளத்தில்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உணவு மானியத்திற்கும்,குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி (ICDS) திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மக்களின் உடல் நலனை, வளர்ச்சியைப் பாதிக்கும்.

கல்வித்துறையில் பிபிபி திட்டத்தில் 150 பல்கலைக் கழகங்கள் உருவாக்குவது, இன் சாட் தேர்வு முறை, ஆன்லைன் தேர்வு முறை உள்ளிட்டவை அடங்கிய தேசிய கல்விக் கொள்கை உழைக்கும் பகுதியைச் சேர்ந்த அடித்தட்டு மக்களின் கல்வி உரிமையைப் பறிக்க வழிவகுக்கும். இத்தகைய கல்விக் கொள்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருப்பது சமூக நீதிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் எதிராக அமையும்.

மத்திய பாஜக அரசின் 2020 -21 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை வழக்கம் போல், தனது குருபீடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதாக உள்ளது. குரு பீடத்தின் மீது உள்ள விசுவாசத்தை மறைத்துவிட்டு, நாட்டின் பிரச்சினைகள் மீது தீர்வுகாண முயற்சிப்பதாக மத்திய பட்ஜெட் நீலிக் கண்ணீர் வடிக்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x