Published : 01 Feb 2020 06:00 PM
Last Updated : 01 Feb 2020 06:00 PM

கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி முதல்வர் காலில் விழுந்து கதறிய இளம்பெண்: வேலூரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சலசலப்பு 

வேலூரில் காவலர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து கதறி அழுதார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசன நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வேலூர் மாவட்டம் வழியாக இன்று சேலத்துக்குச் சென்றார். வேலூர் மாவட்ட எல்லையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரத்யேக மேடையில் கட்சி நிர்வாகிகள் வரிசையாகச் சென்று முதல்வருக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

அப்போது, சிறுமியுடன் வந்த பெண் ஒருவர் முதல்வரிடம் மனு அளித்து காலில் விழுந்து கதறி அழுதார். அவரை முதல்வர் சமாதானம் செய்தார். இதையடுத்து அந்தப் பெண்ணைப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அனிதா என்ற அந்தப் பெண் முதல்வரிடம் அளித்த மனுவில், ‘‘எனது கணவர் சக்திவேல் கடந்த 2003-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு மே 10-ம் தேதி விபத்தில் சிக்கிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் மே 13-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் இல்லை என்பதால் எனக்குக் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. எனக்கு 9 வயதில் மகள் இருக்கிறார். குடும்பம் நடத்த சிரமமாக இருப்பதால் கருணை அடிப்படையில் எனக்கு வேலை அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசுப் பணியில் சேர்ந்தும் ஓய்வூதியம் இல்லாத திட்டத்தால் எங்கள் குடும்பம் இன்று நிர்கதியாய் தவித்து வருகிறது. குறைந்தபட்சம் கருணை அடிப்படையிலான பணியையாவது சில ஆண்டுகளில் வழங்கி இருந்தால் நிம்மதியாய் இருந்திருப்போம். காலம் கடந்துகொண்டே செல்கிறது என்று அவருடன் வந்த உறவினர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x