Last Updated : 31 Jan, 2020 11:20 AM

 

Published : 31 Jan 2020 11:20 AM
Last Updated : 31 Jan 2020 11:20 AM

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் மதுரை கிளை இன்று (ஜன.31) தள்ளுபடி செய்தது.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை கொடுத்த உறுதிமொழியின்படி குடமுழுக்கு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நடந்ததை 4 வார காலத்துக்குள் அறநிலையத்துறையும், அரண்மனை தேவஸ்தானமும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுதியுள்ளது.

தஞ்சை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசு உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில்,"தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் தனி அடையாளம். ஆகவே, தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதிகள், "தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை யாக சாலை தொடங்கி கோபுரக் கலசம் வரை 5 நிலைகளிலும் தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை உறுதிமொழி அளித்திருக்கிறது. அதனை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.

அதனால், தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தக்கோரி தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

அதேவேளையில், இந்து சமய அறநிலையத் துறை கொடுத்த உறுதிமொழியின்படி குடமுழுக்கு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நடந்ததை 4 வார காலத்துக்குள் அறநிலையத்துறையும், அரண்மனை தேவஸ்தானமும் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தரப்பில், "இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஏற்கெனவே சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் நீதிமன்ற உத்தரவையும் மீறியே அங்குள்ள தீட்சிதர்கள் செயல்பட்டார்கள். தட்டிக்கேட்ட எங்களைத் தாக்க முற்பட்டனர். இந்நிலையில், தஞ்சையிலும் அதேபோன்று நடக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதனால், தமிழக அரசு குடமுழுக்கை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். ஒருவேளை நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாவிட்டால் நாங்கள் அவமதிப்பு வழக்கு தொடர வாய்ப்புள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x