Last Updated : 28 Jan, 2020 07:29 PM

 

Published : 28 Jan 2020 07:29 PM
Last Updated : 28 Jan 2020 07:29 PM

ஹைட்ரோகார்பன் திட்டம்; தமிழக அரசு மவுனம் சாதிப்பது நல்லதல்ல: முத்தரசன் 

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு யாரிடமும் அனுமதி கோரத் தேவை இல்லை என மத்திய அரசு அறிவித்த பிறகும் தமிழக அரசு மவுனம் சாதிப்பது நல்லதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''சீனாவில் கரோனா வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 200 மாணவர்களை மீட்பதற்கு தமிழக அரசு எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

முப்படைத் தளபதி அரசியல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ராணுவ பயிற்சிப் பள்ளி நடத்துவது நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழல் நடந்துள்ளதால் அத்தேர்வாணையத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பகத்தன்மை இழந்துள்ளது.எனவே, ஊழலுக்குத் தொடர்புடைய அலுவலர்கள், அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என உறுதி அளித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு யாரிடமும் அனுமதி கோரத் தேவையில்லை என்ற நிலைக்கு மத்திய அரசு வந்தபிறகும் தமிழக அரசு மவுனம் சாதிப்பது நல்லதல்ல. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யுமாறு கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளில் ரசிகர்களைவிட மூட்டைப்பூச்சிகள் அதிகமாக உள்ளன.

தஞ்சாவூர் பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவைத் தவிர மற்ற அனைவரும் தமிழில் கும்பாபிஷேகம் செய்வதை ஆதரிக்கிறார்கள். எனவே, தமிழில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்''.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x