Published : 28 Jan 2020 07:43 AM
Last Updated : 28 Jan 2020 07:43 AM
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங் கிணைப்பு குழு தலைவருமான பி.ஆர்.பாண்டியன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
‘ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி பெறுவதோ, கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தவோ தேவை இல்லை’ என்று மத்திய அரசு கடந்த 16-ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
வாழ்வாதாரம் பாதிக்கும்
இதுபோன்ற திட்டங்களால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் முடங்கி, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலை ஏற்படும்.
எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். அத்துடன் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
சுற்றறிக்கைக்கு தடை
விவசாயிகள், பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கைக்கும் தடை விதித்து அதை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT