Published : 27 Jan 2020 05:56 PM
Last Updated : 27 Jan 2020 05:56 PM
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பாமக தலைவர் ராமதாஸிடம் உறுதியளித்ததை அடுத்து பாமக போராட்டத்தை கைவிடுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை இன்று வெளியிட்ட அறிக்கை:
“ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதிக்கும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாளை (28.01.2020) செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அய்யா ராமதாஸை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுகுறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதையேற்று நாளை பா.ம.க. நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட அய்யா ராமதாஸ், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்றும், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் பொதுத்தேர்வை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டார்.
அதையேற்ற பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று உறுதியளித்தார். பள்ளிக்கல்வி அமைச்சரின் இந்த வாக்குறுதியை ஏற்று நாளை நடைபெறுவதாக இருந்த தொடர்முழக்கப் போராட்டம் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT