Last Updated : 27 Jan, 2020 01:48 PM

 

Published : 27 Jan 2020 01:48 PM
Last Updated : 27 Jan 2020 01:48 PM

ரஜினியை இயக்குவது பாஜகதான் என அவரது பேச்சின் மூலம் தெரிகிறது: கார்த்தி சிதம்பரம்

நடிகர் ரஜினியை இயக்குவது பாஜகதான் என தெரிவதாக, சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி வாக்களிப்பதைத் தடுத்த உள்ளாட்சித் தேர்தலிலும் கட்சித் தாவல் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இன்று (ஜன.27) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணி வைக்கும்போது மனஸ்தாபங்கள் வருவது இயல்புதான். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி வாக்களித்திருக்கிறார்கள். இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றால், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வெற்றவர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி வாக்களிப்போரை தண்டிக்கக்கூடிய கட்சித் தாவல் தடை சட்டத்தை உள்ளாட்சித் தேர்தலுக்கும் அமல்படுத்த வேண்டும்.

விரைவில் ஆலங்குடி, திருமயத்தில் சிவகங்கை எம்.பி.க்கான அலுவலகம் திறக்கப்படும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், பொது வாழ்க்கைக்கு வருவதாகவும் கூறுவதெல்லாம் அவரது ஜனநாயக உரிமைதான். அவ்வாறு வரவேண்டும் என்று விரும்புபவர், தற்போது மக்கள் முன் உள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜிஎஸ்டி, பாபர் மசூதி இடிப்பு குறித்த தீர்ப்பு போன்றவற்றுக்கெல்லாம் கருத்து சொல்லாமல் 50 ஆண்டுகளுக்கும் முந்தையை சம்பவத்தை கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்துவது எனக்கு பொருத்தமாக தெரியவில்லை.

சரித்திர புகழ் மிக்க தலைவர்களை முழுமையாக பார்க்க வேண்டுமே தவிர, அவர்களது ஓரிரு சம்பங்களை எடுத்துக்கொண்டு விமர்சனம் செய்வது தவறு.ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கூட்டம், அவரது பேச்சு எல்லாவற்றையும் பார்த்தால் அவருக்கு ஆலோசனை கூறுவது, அவரை இயக்குவது எல்லாமே பாஜகதான் என்பது தெரிகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x