பெரிய கோயில் குடமுழுக்கு: பூர்வாங்க பூஜையுடன் தொடங்கியது
தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று காலை குடமுழுக்கு விழா பூர்வாங்க பூஜையுடன் தொடங்கி உள்ளது.
மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1003 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010 ஆம் ஆண்டு நிறைவு பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டுமானம் பின்னர் 1010 ஆம் ஆண்டு மாமன்னர் ராஜராஜ சோழனால் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 1997 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
தற்போது குடமுழுக்கு நடத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ராஜராஜன் நுழைவுவாயில், கேரளா நுழைவுவாயில் ஆகியவற்றையும் 216 அடி உயரமுள்ள விமான கோபுரத்தையும் இந்திய தொல்லியல் துறையினர் திருப்பணிகள் செய்துள்ளனர்.
குடமுழுக்கு விழாவின் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக கோயிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், அம்மன், நடராஜர், வராகி உள்ளிட்ட சன்னதிகளில் திருப்பணிகள் நடைபெற்றது. மேலும் விமான கோபுரத்தில் உள்ள கலசம் கீழே இறக்கப்பட்டு அவை புதுப்பிக்கப்பட்டு வரும் 30-ம் தேதி மீண்டும் விமான கோபுரத்தில் பொருத்தப்பட உள்ளது.
பெரிய கோயிலின் நந்திகேஸ்வரர் மண்டபத்தின் முன்பாக உள்ள 26 அடி உயரம் கொண்ட கொடிமரம் பழுதடைந்ததை தொடர்ந்து தற்போது மாற்றப்பட்டு புதிதாக இன்று (ஜன.27) காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக இன்று காலை யஜமான அனுக்ஞை எனப்படும் பூர்வாங்க பூஜையுடன் விழா தொடங்கியது. முன்னதாக பெருவுடையார் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க பூர்வாங்க பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, பெரிய கோயில் திருப்பணி குழு தலைவர் துரை. திருஞானம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், இந்திய தொல்லியல் துறை முதல்நிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
