Last Updated : 27 Jan, 2020 11:16 AM

 

Published : 27 Jan 2020 11:16 AM
Last Updated : 27 Jan 2020 11:16 AM

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளைக்கு ஒத்திவைப்பு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளைக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இன்று காலையில், தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை நடத்தத் தடை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு தடை கோரப்பட்டது. வழக்கறிஞர் சரவணன் தரப்பில், நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது.

அதில், "யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை நடத்தத் தொல்லியல் துறையின் அனுமதி பெறவில்லை. எனவே, குடமுழுக்கை நடத்தத் தடை விதிக்க வேண்டும். ஆகவே, இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது. அதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு:

இதற்கிடையில், அரசு தரப்பில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்குகளை நாளை பட்டியலிடுமாறு கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்குகளை நாளை ஒத்திவைத்துள்ளனர்.

தவிர மைலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ், தஞ்சை பெரியகோயில் இந்து ஆலயம். ஆகவே, தேவ பாஷையான சமஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

தமிழ்தேச பொதுவுடைமை கட்சியின் தலைவர் மணியரசன் தரப்பிலும், தமிழிலேயே குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x