Published : 27 Jan 2020 07:02 AM
Last Updated : 27 Jan 2020 07:02 AM
கோயம்பேடு சந்தையில் வரத்துஅதிகரிப்பால் சாம்பார் வெங்காயம்விலை கிலோ ரூ.60 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.200 வரை உயர்ந்திருந்தது. பெரிய வெங்காயம் விலை உயர்வால் சின்ன வெங்காயத்தின் பயன்பாடு அதிகரித்த நிலையில், அதன் விலையும் ரூ.200 வரை உயர்ந்திருந்தது. தற்போது பெரிய வெங்காய வரத்து அதிகரித்து அதன் விலை கிலோ ரூ.40 ஆக குறைந்துள்ளது. அதேபோன்று சாம்பார் வெங்காயம் வரத்து அதிகரித்து அதன் விலையும் ரூ.60 ஆக குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான தக்காளி, கத்தரிக்காய் தலா ரூ.20, உருளைக்கிழங்கு, பாகற்காய் தலா ரூ.25,அவரைக்காய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.35, முள்ளங்கி, பச்சை மிளகாய், முட்டைக்கோஸ் தலா ரூ.10, கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.12, புடலங்காய் ரூ.15, முருங்கைக்காய் ரூ.140 என விற்கப்படுகிறது.
சாம்பார் வெங்காயம் விலை குறைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு காய்கறி சந்தை மொத்த வியாபாரிகள் கூறும்போது, "திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அப்பகுதிகளில் இருந்து தற்போது சின்ன வெங்காயம் அதிக அளவில் கோயம்பேடு சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் நேற்று ரூ.60-க்கு விற்கப்படுகிறது. வரும் வாரங்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT