Published : 27 Jan 2020 06:59 AM
Last Updated : 27 Jan 2020 06:59 AM

ஆட்கள் பற்றாக்குறை, பயணிகள் புகார் எதிரொலி: மாநகர பேருந்து தூய்மை பணியில் தனியார்

சென்னை

ஆட்கள் பற்றாக்குறை மற்றும் பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் 3,600 மேற்பட்ட பேருந்துகளை தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 765 வழித்தடங்களில் தினமும் சுமார் 3,600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும்சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புறநகர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரை இல்லை என்று புகார் கூறப்படுகிறது. மேலும் சில மாநகர பேருந்துகளில் குப்பைகள் கிடப்பதாகவும், பேருந்துகள் தூசு படிந்து காணப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

சில நேரங்களில் சிதிலமடைந்த பேருந்து படிக்கட்டுகள், உடைந்தஜன்னல் கண்ணாடி சிதறல்களால் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் பதிவாகியுள்ளது. இந்நிலையில், மநகர போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமானபேருந்துகளை தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள், பேருந்துகளை பராமரிக்க முன்பெல்லாம் கடைநிலைஊழியர்கள் அதிக அளவில் இருப்பார்கள். நிதி நெருக்கடி காரணமாக பல ஆண்டுகளாக புதிய ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதையடுத்து, தினக் கூலி ஊழியர்களை நியமித்து பணிகளை மேற்கொண்டோம். ஆனால் சமீபகாலமாக போதிய அளவுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. மேலும், பயணிகள் தரப்பிலும் பேருந்துகள் தூய்மையாக இல்லை என புகார்கள் வந்தன.

இந்நிலையில் முதல்கட்டமாக 31 பேருந்து நிலையங்களில் தனியார்நிறுவனம் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அதேபோல், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் 200 சிறிய பேருந்துகள் உட்பட மொத்தம் 3,600 மாநகர பேருந்துகளை தனியார் மூலம் தூய்மைப்படுத்த விரைவில் தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யவுள்ளோம். இதற்கான டெண்டர் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வெளியிடப்படுகிறது.

ஒப்பந்த காலம் 11 மாதங்ளாகும். மாநகர போக்குவரத்து கழகத்தில் தூய்மை பணிகளுக்காக முதல்முறையாக டெண்டர் மூலம் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் நிறுவனம் மூலம் மொத்தமுள்ள 33 போக்குவரத்து பணிமனைகளைச் சேர்ந்த பேருந்துகளின்இருக்கைகள், கண்ணாடிகள்,தளப்பகுதி உள்ளிட்டவை முழுமையாக தூய்மைப்படுத்தப்படும். தூய்மை பணிகளை சரியாக மேற்கொள்ளாவிட்டால் அந்நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x