

தமிழகத்தில் பொறியியல் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம், இம்மாதம் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 3-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 59 மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
சனிக்கிழமை வரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 806 விண்ணப்பங்கள் விற்பனையாகி இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை, உரிய ஆவணங்களுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்குள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்வது, ரேங்க் பட்டியல் வெளியிடுவது ஆகிய பணிகள் முடிவடைந்ததும், விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு ஜூன் 3-வது வாரத்தில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பொறியியல் விண்ணப்பங்களை இம்மாதம் 27-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று அண்ணாப் பல்கலைக்கழகம் இன்று (திங்கள்கிழமை) அறிவித்தது.