Published : 25 Jan 2020 09:28 PM
Last Updated : 25 Jan 2020 09:28 PM

போலி வக்கீல்கள் பட்டியல் ரெடி: தாமாக முன்வந்து சான்றிதழை ஒப்படைத்தால் தப்பித்தீர்கள்: இல்லையேல் கைது , பார்கவுன்சில் எச்சரிக்கை

ஆந்திராவில் வக்கீல் பட்டத்தை பணம் கொடுத்து பெற்றவர்கள் குறித்த புகாரில் ஆந்திர சட்டக்கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார், போலி வக்கீல்கள் சான்றிதழை சரண்டர் செய்தால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பலாம் மீறினால் கடும் நடவடிக்கை என பார்கவுன்சில் எச்சரித்துள்ளது.

கல்லூரிக்குச் செல்லாமலேயே வக்கீல் பட்டம் பெறவும், ரெகுலராக கல்லூரிக்கு வந்ததாக போலி சான்றிதழ் வழங்கி பல போலி வக்கீல்களை உருவாக்கிய ஆந்திரா கல்லூரி முதல்வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலி வக்கீல்களை இனங்காணும் வேலையும் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியதாவது:

“சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் வேகவதி தெருவை சேர்ந்த விபின்(59). தென்னக இரயில்வே துறையில் கார்டாக வேலை பார்த்து வந்தார். பணியிலிருக்கும் போதே துறையின் அனுமதியின்றி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சட்ட கல்லூரியில் கடந்த 2015 முதல் 2018 வரை மூன்று ஆண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பு படித்ததாக பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயற்சித்தார்.

சட்டக்கல்லூரி தேர்வு எழுதுவதற்கு குறைந்த பட்சம் 70 சதவிகித வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். விபின், இரயில்வே துறையில் பணியிலிருந்த காரணத்தினால் கல்லூரிக்கு செல்லாமலே, சென்றதாக போலியான வருகை பதிவு பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார். இவர் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் கழகத்தில் (bar council) செய்ய விண்ணப்பித்தார்..

இது சம்மந்தமாக நடந்த விசாரணையில் ஆந்திர கல்லூரியின் முதல்வர் .ஹிமவந்த குமார் கைது செய்யப்பட்டார் இது சம்பந்தமான விசாரணையில் இதுபோன்று பணியில் இருந்துக்கொண்டே போலி வருகைப்பதிவேடு சமர்பித்ததாக 300 பேர் மீது சந்தேகம் இருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணை முடிவில் இவ்வாறு பார்கவுன்சிலில் தனியார் நிறுவனங்களிலோ, அரசுப்பணியில் இருந்துக்கொண்டு படித்தார்கள் என்பதை விசாரணை நடத்தி அந்த பட்டியலை எங்களிடம் அளிப்பார்கள்.

தமிழக பாண்டிச்சேரி பார்கவுன்சிலில் இவ்வாறு யாரேனும் போலியாக வருகைச் சான்று கொடுத்து வழக்கறிஞராக பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பாக பார்கவுன்சில் கொடுக்கிறது. அவ்வாறு போலியாக பதிவு செய்தவர்கள் தாமாக முன்வந்து சான்றிதழையும், ஐடி கார்டையும், என்ரோல்மெண்ட் சர்டிபிகேட்டையும் சம்ர்பித்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு கைது நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்படும்.

அவ்வாறு செய்யாமல் மறைத்தால் விசாரணையில் தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுத்து, கைது செய்யப்படுவார்கள். அதுவுமல்லாமல் அவர்கள் அந்தநேரத்தில் பணியில் இருந்து பெற்ற பணப்பயன்கள் பறிமுதல் செய்யப்படும். அவர்களாக இந்த தகவலைக் கேள்விப்பட்டவுடன் உடனடியாக சரண்டர் செய்யாமல் தகவல் தெரிந்தாலே கைது செய்யப்படுவார்கள்.

போலி வக்கீல் என்றால் சான்றிதழ் சரியாக இருக்கும்.ஆனால் கல்லூரிக்கு போகாமலே போனதாக வருகைப்பதிவேட்டை தயாரித்து அளித்துள்ளார்கள். ஆகையால் உடனடியாக சரண்டர் செய்யாவிட்டால் கைது செய்யப்படுவர். ஒரு கமிட்டி அமைத்துள்ளோம். அவர்கள் இதுபோன்று மற்ற மாநிலங்களில் போலியாக வருகைப்பதிவேடு அளித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றவர்கள் குறித்து ஆய்வு செய்து எங்களுக்கு அந்தப்பட்டியலை அளிக்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்போம்.”

இவ்வாறு பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பார்கவுன்சில் துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன், என்ரோல்மெண்ட் கமிட்டி தலைவர் கே.பாலு மற்றும் பார்கவுன்சில் மற்ற நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x