Published : 25 Jan 2020 05:43 PM
Last Updated : 25 Jan 2020 05:43 PM

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு: பிப்., 10 கடைசி நாள் என அறிவிப்பு

ராமேசுவரம்

கச்சத்தீவில் வரும் மார்ச் 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு செல்ல பக்தர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 10 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோனியார் தேவாலயம் நிறுவப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம்

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்தி வந்தனர். 08.07.1974 அன்று இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவுக்கு தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எழுதிக் கொடுத்தார்.

இந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள புனிதஅந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசு சார்பாக கச்சத்தீவில் புதிய தேவாலயம் கடந்த 23.03.2016 அன்று திறக்கப்பட்டது.

2020–ம் ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 6 வெள்ளிக்கிழமை துவங்கி மார்ச் 7 சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளன.

தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் நமது செய்தியாளரிடம் கூறியதாவது,

மார்ச் 6 அன்று பிற்பகல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். வெள்ளிக்கிழமை இரவு தேர்பவனியும், மார்ச் 7தேதி சனிக்கிழமை அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும். பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும்.

இந்த ஆண்டு 70 விசைப்படகுகள் மற்றும் 20 நாட்டுப்படகுகளில் கச்சதீவுக்கு பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஒரு விசைப்படகில் படகோட்டி உள்பட 35 பயணிகளும், நாட்டுப்படகில் படகோட்டி உள்பட 15 பேரும் அனுமதிக்கப்படுவார்கள்.

கச்சதீவு செல்ல விரும்பும் பக்தர்கள் தாங்களே நேரடியாக ராமேசுவரம் வேர்க்கோட்டில் உள்ள ஆலயத் திருப்பயண அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். விசைப்படகு கட்டணமாக ஒரு பயணிக்கு ரூ.1500-ம், நாட்டுப்படகு கட்டணமாக ஒரு பயணிக்கு ரூ.400-ம் செலுத்த வேண்டும்.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் பூர்த்தி செய்யப்பட்ட பக்தர்களின் விண்ணப்பங்களை வழங்க பிப்ரவரி 10 கடைசி நாளாகும். வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் தங்கள் ஊர் காவல் நிலையங்களில் தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x