Last Updated : 25 Jan, 2020 08:01 AM

 

Published : 25 Jan 2020 08:01 AM
Last Updated : 25 Jan 2020 08:01 AM

போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள போதை சோதனை கருவியில் நவீன ‘சிப்’- வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதை தடுக்க நடவடிக்கை

மது போதையில் வரும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதைத் தடுக்க, சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள போதை சோதனை கருவியில் நவீன ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல்வேறு தொழில்நுட்பங்களையும் புகுத்தி வருகின்றனர்.

சாலை விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கும்போது சில நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதுண்டு. இதுபோன்ற சமயங்களில் யார் மீது தவறு என்பதைக் கண்டறிய போக்குவரத்து போலீஸாருக்கு, சீருடையுடன் பொருத்தப்பட்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீஸார் லஞ்சம் பெறுவதைத் தடுக்க, பணமில்லா அபராதம் செலுத்தும் முறை கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் அபராதத் தொகையை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாக வாகன ஓட்டிகள் செலுத்தலாம். அதேபோல், அபராதத்துக்கான ரசீதை பெற்று வங்கி, அஞ்சலகங்களிலும் செலுத்தலாம். ஆனால், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர், போக்குவரத்து போலீஸாரிடம் பிடிபட்டால் அதற்கான அபராதத் தொகையான ரூ.10 ஆயிரத்தை நீதிமன்றத்தில் மட்டுமே செலுத்த முடியும்.

‘ஆல்கஹால் பிரெத் அனலைசர்' என்ற கருவி மூலம் போதையில் வாகனம் ஓட்டியதை உறுதி செய்து, வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் போலீஸாரில் சிலர், அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அபராதம் விதிக்காமல் விட்டுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், இந்த பிரச்சினைக்கு தற்போது முடிவு கணப்பட்டுள்ளது. அதன்படி ‘ஆல்கஹால் பிரெத் அனலைசர்' கருவியில் புதிதாக ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருவியில் வாகன ஓட்டிகள் ஊதும்போது அவர்களில் எத்தனை பேர் மது அருந்தியுள்ளனர் என்ற எண்ணிக்கையை தெரிவிப்பதோடு அந்த விபரங்கள் இயந்திரத்தில் தானாகவே சேமிக்கப்படும். இந்த விபரத்தை உயர் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸார் தெரிவிக்க வேண்டும். இதனால் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தாமல் தப்ப முடியாது. மேலும் அவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை போலீஸார் விடுவிப்பதும் தடுக்கப்படும்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண் கூறும்போது, “வாகன ஓட்டிகளிடம் பண முறைகேட்டில் போக்குவரத்து போலீஸார் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தற்போது ‘பிரெத் அனலைசர்’ கருவியில் நவீன ‘சிப்’ பொருத்தி உள்ளோம்.

இதன்மூலம் எத்தனை வாகன ஓட்டிகள் மது அருந்தியுள்ளார் என்றும், அவர்களிடம் முறையாக அபராதம் வசூலிக்கப்பட்டதா என்றும் தெரியவரும். இந்த நடவடிக்கை மூலம் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. மீறுபவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x